யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறுவர் தினம் 04.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை ஆசிரிய வட்டம் பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. அகவணக்கத்துடன் ஆரம்பமான சிறுவர் தின நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வரின் வாழ்த்துத்துரை இடம்பெற்றது. தனது வாழ்த்துரையில் மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் பொறுப்புடனும் செயற்படவேண்டும் என்றும்; மாணவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்: மாணவர்கள் மகிழ்வாகக் கற்பதற்கான சூழலை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பது குறித்துப் பல திட்டங்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றோம்: பலசெயற்பாடுகளை ஆரம்பித்து இருக்கின்றோம். இச்செயற்பாடுகளுக்கு அனைவரது ஒத்துழைப்பும் எமக்குக் கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சிறுவர் தின விழாவில் தொடர்ந்து சிறுவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் தரம் 7 மாணவன் செல்வன் மா. இசைப்பிரியன் அவர்களால் சிறுவர் தொடர்பான பாடல் இசைக்கப்பட்டது. இசைப்பிரியன் பெயருக்கு ஏற்றால் போல் அனைத்து உள்ளங்களையும் இசைவெள்ளத்தில் ஆழ்த்தினார். இசைப்பிரியனின் பாடலைத்; தொடர்ந்து கல்லூரியின் பிரதியதிபர் திருமதி. கி.சு.றெ. செல்வகுணாளன் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. உரையில் சிறுவர்கள் எனப்படுபவர் யார்? சிறுவர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது? அதன் நோக்கம், அது எப்படி ஆரம்பிக்கப்பட்டது போன்ற விளக்கங்களுடன் சிறுவர்களுக்கான வாழ்த்துரையை வழங்கினார். பிரதியதிபரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தரம் 7 மாணவன் செல்வன் கி. துவாரகன் அவர்களால் நகைச்சுவைக் கதை கூறும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கல்லூரியின் உப அதிபர் திரு. பெ. வசந்தன் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. சிறுவர்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அவர் வாழ்த்துரை இடம்பெற்றது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பொது அறிவுப்போட்டியில் பிரிவு இரீதியாக முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இப்போட்டிஒழுங்குகளை சமூக விஞ்ஞான மன்றம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான பரிசில்களை அதிபர், பிரதியதிபர், உப அதிபர்கள் வழங்கிக் கௌரவித்தனர். மேலும் சிறுவர் தொடர்பான கருத்துரைகளைத் திரு. இ. ஜனதன் ஆசிரியர் அவர்கள் தொகுத்து மிக நீண்ட உரையை வழங்கினார். சிறுவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் கடமைகளையும் அனைவரும் தெரிந்து கொள்ளத்தக்க முறையில் அவர் கருத்துரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்தின நிகழ்வில தரம் எட்டு மாணவன் கே. குகேஸ், தரம் 10 மாணவன் பி. அருண் ஆகியோரின் கவிதை நிகழ்வுகளும், தரம்10 மாணவன் ம. யதோட்சயன் அவர்களின் பேச்சும் இடம்பெற்றது. தொடர்ந்து.தரம் 11 மாணவன் ஜெ. ஹிரித்திக்ரோசன் அவர்களின் ஆங்கிலக் கவிதை இடம் பெற்றது. மேலும் தொழினுட்பப்பிரிவு மாணவன் யக்சிகனின் பாடலும் ஆசிரியர் கருணாகரனின் பாடலும் அனைத்து நெஞ்சங்களிலும் ஒலித்து ஓய்ந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களான சிறப்பான ஓர் உரையாக ஆசிரியர் திரு. எஸ். சுரேஸ்குமார் அவர்களின் சிறுவர்களின் ஆளமை தொடர்பான கருத்துரை அமைந்திருந்தது. நிகழ்வின் நிறைவாக தொழினுட்பப்பிரிவு மாணவர்களின் நாடகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது. இம்முறை மாணவர்களுக்கு சிறுவர்தின அன்பளிப்பாக எழுதுகருவிகள் கல்லூரியின் பழைய மாணவரால் வழங்கப்பட்டமை சிறுவர்தினத்தின் விசேட அம்சமாக விளங்கியது எனலாம்.

















